Sunday, April 17, 2016

வந்தேறிகள் - சூழ்ச்சி அரசியலின் கொடூர முகம்

வந்தேறிகள் - சூழ்ச்சி அரசியலின் கொடூர முகம்

தமிழகமும் இந்தியாவைப் போல் பன்முகத் தன்மை கொண்டது. ஆதித்(?) தமிழர் அல்லாது தெலுங்கர், கன்னடர், ஜெயின் மற்றும் இன்னும் பிற குறு சமூகங்கள் அடங்கியதுதான் தமிழகம். பூர்வீகம் தமிழகம் இல்லையென்றாலும், பல தலைமுறைகளாக இங்கேயே வாழ்வதால், ஒரு சில பாரம்பரிய முறைகளைத் தவிர்த்து, தமிழ் கலாச்சாரத்தோடு ஒன்றெனக் கலந்தவர்கள். சித்திரை-1 தான் இவர்களுக்கு புத்தாண்டு. பொங்கல் தான் உண்மையான பண்டிகை. சித்திரையில் அம்மன் திருவிழா. என்றுமே நாம் தமிழர்கள் இல்லை என்ற எண்ணம் தலை தூக்கியதே இல்லை.

ஆனால், சமீப காலமாக தமிழனை தமிழன்தான் ஆள வேண்டும்; இவன் தெலுங்கன், இவன் கன்னடன், இவன் மலையாளி என பிரித்தாளும் சூழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி பெரும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. தமிழனை தமிழன்தான் ஆள வேண்டும் என்பது வரவேற்கத் தக்க விஷயம்தான். ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்தால், அந்த சிறுபான்மையினர் என்ன கதிக்கு ஆளாவார்கள் என்று நினைத்துப் பாருங்கள்?  இப்போதே வந்தேறிகள் என்று சீண்டுகிறார்கள். நாளை தமிழருக்கு மட்டும்தான் அரசு வேலை, தமிழர் மட்டும் தான் இங்கே கடை வைக்க வேண்டும், தமிழர் மட்டும் தான் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று கிளம்பினால்? தமிழன் தான் உயர்ந்த ஜாதி, வந்தேறிகள் எல்லாம் கீழ் ஜாதி என ஆரம்பித்தால்?ஒட்டு மொத்த சிறுபான்மையினர் இனமே தமிழகத்தில் வாழ முடியாத சூழல் ஏற்படலாம். ஜெர்மானியர்கள் தான் உயர்ந்த ரத்தம், யூதர்கள் அசுத்த ரத்தம் என்று ஆரம்பித்த ஹிட்லர், இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் ஜெர்மனியை எந்த நிலைக்கு ஆளாக்கினார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஜெர்மனிக்கு ஒரு ஹிட்லர் என்றால், ஏறக்குறைய தமிழகத்திற்கு சீமான். இவரிடம் சில கேள்விகள்.

1. வந்தேறிகள் என்று சொல்லப்படும் பிற சமூகத்தின் ஓட்டு எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லும் துணிவு உண்டா?
2. உங்களின் கொள்கைப்படி, ஆதித் தமிழர் அல்லாதவர்கள் வந்தேறிகள். அப்படிப் பார்த்தால், இந்து மதம் தவிர்த்த, கிருத்துவர்கள், முஸ்லிம்கள், சமணர்கள் இவர்கள் எல்லேருமே வந்தேறிகள்தான். இவர்கள் யாரும் எங்களுக்கு ஓட்டு போடத் தேவையில்லை என்று சொல்ல முடியுமா?
3. தெளுங்கனான திருமலை நாயக்கர் கட்டிய திருமலை நாயக்கர் மஹாலை இடிக்க வேண்டும் என சொன்னீர்கள். வெள்ளையர்களிடமும்தான் நாம் அடிமைப் பட்டோம். அதற்காக அவர்கள் தொடங்கிய இந்தியன் ரயில்வேயை ரத்து செய்ய முடியுமா??

பின் குறிப்பு: சீமானின் கூற்றுப்படி நானும் வந்தேறிதான். சுமாரு 12-13 தலைமுறைக்கு முன்னால், எங்கள் முன்னோர்கள் ஆந்திராவின் ஏலூர் என்ற ஊரிலிருந்து இங்கே பஞ்சம் பிழைக்க வந்ததாக என் தாத்தா சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் என்றுமே நாங்கள் தெலுங்கர் என்று நினைத்ததில்லை. நாங்கள் மட்டுமல்ல. வந்தேறிகள் எல்லோருமே!!! 




Tuesday, February 9, 2016

ப்ராஜெக்ட்டும், சோழா மெஸ்ஸும் (1)

ப்ராஜெக்ட்டும், சோழா மெஸ்ஸும் (1)

எட்டாவது செமஸ்டர். ப்ராஜெக்ட் எனப்படும் முக்கியமான வஸ்து வரும் செமஸ்டர். ஆரம்பத்தில் நாமாக எதாவது ப்ராஜெக்ட் செய்து சாதிக்க வேண்டும் என்ற பெரிதாக கனவு இருந்தது. பின்னாளில் ஆசைகள் சுருக்கப்பட்டு, போகப் போக நாமாக செய்வது கடினம் என்பது விளங்கி, நான்காம் ஆண்டில் நாமாக செய்யவே முடியாது என்பது புரிந்தது. கோயம்புத்தூரில் சல்லிசான விலைக்கு ப்ராஜெக்ட் விற்கிறார்கள் என்று தெரிந்து, அவனவன் கோயம்புத்தூருக்கும், ஈரோடுக்கும் அடிக்கடி போய் வர நேர்ந்தது.

 எட்டாவது செமஸ்டரின் ஆரம்பத்திலேயே ப்ராஜெக்ட்க்கு ஆள் சேர்க்கும் படலம் ஆரம்பித்திருந்தது. சில பேர் தேவர் மெஸ்ஸில் பரோட்டா, ஆம்லெட் வாங்கிக் கொடுத்து குரூப் சேர்க்கிறார்கள் என்ற வதந்தி வேறு பரவியது. சரி, நமக்குன்னு ஒருத்தன் இனிமேல பொறக்கப் போகிறான்(?) என்று நினைத்துக் கொண்டு பெரிதாக மெனக்கெடவில்லை. இறுதியாக நான், பரணி, விஜயவேல், மணிவண்ணன் என நான்கு பேராக ப்ராஜெக்ட் குரூப் ஆரம்பிக்கப் பட்டது. க்ரூப்பின் முதல் தீர்மானமாக, நான் ஏற்கனவே கேம்பஸ் இன்டெர்வியுவில் செலக்ட் ஆனதால், ப்ராஜெக்ட்டின் முழு வேலையும் நான் மட்டும் பார்ப்பதாக முடிவு செய்யப்பட்டது. ப்ராஜெக்ட் குரூப் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று நினைத்துக் கொண்டேன்.

ப்ராஜெக்ட் சென்ட்டர் பிடிப்பது அடுத்த வேலை. கோயம்புத்தூரில் ஹோப் காலேஜ் என்னுமிடத்தில் நிறைய ப்ராஜெக்ட் சென்ட்டர்கள் இருப்பது கேள்விப்பட்டு அங்கே போனோம். அங்கே நிறைய இல்லை, திரும்பிய பக்கமெல்லாம், புற்றீசல் போல சென்ட்டர்கள் இருந்தன. எங்கே செல்வது என்று குழம்பி, ஒரு வழியாக ACET என்னும் சென்ட்டரை அணுகி, 10,000 ரூபாய்க்கு பேரம் முடிக்கப்பட்டது. அங்கே சேர்ந்ததற்கு இரண்டு காரணங்கள். 1. அந்த சென்ட்டரில் அமெரிக்க கம்பனியுடன் கொலாப்ரேஷன் இருப்பதாக ஒரு போட்டோவை காட்டினான். அதில் சென்ட்டர் ஓனருடன் ஒரு வெள்ளையன் இருந்தான். 2. அந்த சென்ட்டர் பால்கனியில் இருந்து பார்த்தால் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் கல்லூரி பெண்கள் தெளிவாகத் தெரிந்தனர்!!!

எங்களுடன் பாலமுருகன் மற்றும் கிருபாகரன்  க்ரூப்பும் அங்கே ப்ரோஜெக்ட்டை வாங்கினார்கள். நாங்கள் எல்லோரும், சென்ட்டர்க்கு பக்கத்திலேயே ஒரு PG ஹாஸ்டலில் ரூம் எடுத்துத் தங்கினோம். இரண்டு நாட்கள் கழித்து ப்ராஜெக்ட் கிளாஸ் தொடங்கும் என்றும், இரண்டு வாரங்கள் நடக்கும் என்றும் ஓனர் சொன்னான். இரு நாட்கள் கழித்து சரித்திர புகழ் பெற்ற வகுப்புகள் தொடங்கின. அப்போது தெரியாது நாங்கள் மொத்தமாக ஏமாற்ற்றப் படப்போகிறோம் என்று..

(தொடரும்)





















Saturday, February 6, 2016

எரியும் பனிக்காடு - அதிகாரச் சுரண்டலின் கொடூர முகம் (Part-2)

எரியும் பனிக்காடு - அதிகாரச் சுரண்டலின் கொடூர முகம் (Part-2)

கருப்பன்-வள்ளி மாதிரியான ஆயிரக்கணக்கான தலித் தொழிலாளர்கள், வெள்ளையர்கள் & சில இந்திய ஈனப் பிறவிகளால் வதைக்கப்பட்டதே எரியும் பனிக்காடு புத்தகம். ஆனால் இன்றுவரை தலித் மட்டுமன்றி, அனைத்து ஏழைத் தொழிலாளர்களும் காலம் காலமாக கொடுமையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு வித்தியாசம், அப்போது வெள்ளையன் + சில துரோகிகள். இப்போது முழுக்க முழுக்க பேராசை பிடித்த (இந்திய) பண முதலைகள்.

ஷாப்பிங் மால்களில் ஒரு கப் காபி நூறு ரூபாய்க்கு விற்கும் இதே நாட்டில்தான், நூறுக்கும் குறைவாக ஒரு நாள் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். வட மாநிலங்களில் இருந்து இங்கே கட்டுமான வேலைக்கு வரும் அப்பாவி தொழிலாளர்களுக்கும், கருப்பன்-வள்ளிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அங்கே, ஆனைமலை எஸ்டேட் என்றால், இங்கே சிங்கார சென்னை. இங்கே அவர்கள் செத்தாலும் கேட்பதற்கு ஒரு நாதியும் கிடையாது.

எல்லாத் தொழிலாளர்களும் சுரண்டப்படுகிறார்கள் என்றாலும், அதிக பாதிப்புக்கு உள்ளாவது- உள்ளாகியிருப்பது தலித் மக்களே. அரசு அதிகாரமும், உயர் ஜாதி வர்க்கமும், அவர்களை ஒரு எல்லைக்கு மேல் வளரவோ, சிந்திக்கவோ விடாமல், தன்னை சார்ந்து இருக்கும் படியாகவே வைத்துக் கொள்ள விரும்புகிறது. இதற்க்கு ஒரு நல்ல உதராணம்- என்னுடன் 10-வது வரை ஒன்றாகப் படித்த தலித் நண்பன், எங்கள் ஊரில் சாணி தட்டிக் கொண்டு இருக்கிறான். அதுவொன்றும் இழி தொழில் இல்லை என்றாலும், மூன்று தலை முறையாக அவன் குடும்பத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதுதான் பிரச்சினை. எங்கே தவறு? யாரைப் பழி சொல்வது? என்ன தீர்வு?

இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது, சில அறிவுஜீவிகள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்தால்தான் இந்தியா உருப்படும் என்று ஜல்லியடிப்பது என்ன மாதிரியான நியாயம் என்று புரியவில்லை. இட ஒதுக்கீட்டை தவறாக உபயோகிப்பதும், அது சரியான நபர்களுக்கு போய் சேரவில்லை என்பதுமே அதில் இருக்கும் தலையாய பிரச்சினைகள். அதை சரி செய்ய வக்கில்லாமல், மனித மலத்தை சுமந்து கொண்டும், கழிவு அடைப்பை சரி செய்ய குழியில் இறங்கி உயிரை மாய்க்கும் பல தலித் மக்களின் ஒரே ஆயுதமான இட ஒதுக்கீட்டையும் அவர்களிடம் இருந்து பிடுங்குவது என்ன நீதி?

என்றைக்கு கழிவு அடைப்பை சரி செய்ய பள்ளத்தில் இறங்குபவன் ஒரு தலித் இல்லையோ, அன்றைக்கு ரத்து செய்து கொள்ளுங்கள் இட ஒதுக்கீட்டை. 









எரியும் பனிக்காடு - அதிகாரச் சுரண்டலின் கொடூர முகம் (Part-1)

எரியும் பனிக்காடு - அதிகாரச் சுரண்டலின் கொடூர முகம் (Part-1)

P.H.டேனியல் எழுதி, இரா.முருகவேள் மொழி பெயர்த்த 'எரியும் பனிக்காடு' (Red Tea) புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். அதன் மீதான பார்வை இங்கே. பாலா இயக்கிய 'பரதேசி' படத்தின் மூலக்கதை இப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரத்திற்கு முன்னால், இந்தியாவில் புரையோடிப் போயிருந்த சாதிய பாகுபாடுகள், ஆங்கிலேயர்களால் கொஞ்சம் மாற்றப்பட்டது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், இந்த புத்தகம் உங்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுக்கும். இந்து மதத்தின் சாதிய அமைப்பால், விவசாய மற்றும் பண்ணைக் கூலிகளாக இருந்த ஏழை தலித் மக்கள், வெள்ளையர்களின் சுய லாபத்திற்காகவும், பண வெறிக்காகவும் எப்படி பலிகாடா ஆனார்கள் என்பதை முகத்தில் அறைந்தால் போல் சொல்கிறது இந்த புத்தகம். நம் நாட்டைச் சேர்ந்த சில ஈனப் பிறவிகளும், தங்கள் நலனுக்காக, வெள்ளையர்களின் கால்களைக் கழுவிப் பிழைத்துக் கொண்டு, தன சொந்த இன மக்களியே பலி கொடுத்த கொடூரத்தையும் பதிவு செய்துள்ளது.

விவசாயம் பொய்த்ததால், சொந்த ஊரில் பிழைக்க வழியற்று, கங்காணியின் ஆசை வார்த்தையில் மயங்கி, தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்குப் போகும் கருப்பன்-வள்ளி தம்பதிகளின் பயணத்தில் ஆரம்பிக்கிறது கதை. அங்கே நடக்கும் சுரண்டல்கள், கொடுமைகள், பாலியல் வன்முறைகள், கற்பனைக்கும் எட்டாத கொடூரங்கள் அவர்களின் மூலமாக சொல்லப் படுகிறது. ஒரு வருட ஒப்பந்தத்தில் வரும் கருப்பன்-வள்ளி தம்பதி, கங்கானியால் ஏமாற்ற்றப்பட்டு, மூன்று வருடம் தங்க நேர்ந்து, வள்ளியின் மரணத்தில் முடிகிறது புத்தகம். வள்ளியின் மரணத்தில், அழுவது கருப்பன் மட்டுமல்ல, நாமும்தான்.

புத்தகம் படித்த மறுநாள், அலுவலகத்தில் தேநீர் அருந்தும்போது, ஒரு கணம் உற்றுப் பார்த்தேன். அது கருப்பன்-வள்ளியின் கண்ணீரும், ரத்தமுமாக தெரிந்தது. முதலாளித்துவத்தின் பணவெறிக்கு பலியான அத்தனை தேயிலைத் தொழிலாளர்களின் கண்ணீரும், ரத்தமும் நாம் அருந்தும் ஒவ்வொரு தேநீர் துளியிலும் இருக்கிறது என்பதே மறுக்க முடியாத, கசப்பான உண்மை...









Wednesday, January 13, 2016

ஸ்டிக்கர்களின் காலம்.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இத்தனை TMC நீரைத் திறந்து விடவேண்டும் என்று பத்து முறைக்கும் மேலாக உச்ச நீதி மன்றம் கூவினாலும், அதை கர்நாடகம் காதில் வாங்காது.

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீரைத் தேக்கலாம் என்று உச்ச நீதி மன்றம் 1001வது முறையாக சொன்னாலும், அங்கே செல்லும் தமிழக அதிகாரிகளை கேரளம் தடுத்து நிறுத்தும்.

உண்மையான சாட்சி நொந்து, வெந்து இறந்து போக, பிறழ் சாட்சியின் அடிப்படையில், சல்மான்கான் தான் காரை ஓட்டினார் என்பதற்கு ஆதாரம் போதவில்லை என்று அவர் விடுதலை ஆகலாம்.

ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியை செலுத்தி, அவளை சிதைத்த மிருகம், 18- வயது ஆகவில்லை என்பதனால் விடுதலை ஆகி, கைசெலவுக்கு அரசாங்கத்திடம் இருந்து பணம் பெறலாம்.

நூற்றுக்கணக்கான அப்பாவி தொழிலாளர்களை பலிவாங்கிய முகலிவாக்கம் 11-மாடி கட்டிடத்தின் முதலாளி, மறுநாளே ஜாமீனில் வெளிவந்து, இன்று வரை, சொகுசு வாழ்க்கை வாழலாம்.

மேற்கண்ட அற்புதங்கள் எல்லாம் நிகழும் நம் இந்திய தேசத்தில், தன் சொந்த நாட்டைச் சேர்ந்த ஓர் இனத்தின் மக்களின் மரபை, அடையாளத்தை, எங்கிருந்தோ வந்த அந்நிய அமைப்பால் தடை செய்ய முடிகிறது என்றால், ஆச்சர்யம் இல்லை தானே? ஏனென்றால் இது ஸ்டிக்கர்களின் காலம்.

Tuesday, January 12, 2016

ஜல்லிக்கட்டு மீதான தடை - ஒரு தொடக்கம்

ஜல்லிக்கட்டு மீதான தடை - ஒரு தொடக்கம்

ஜல்லிக்கட்டு பிரச்சினையில், இப்போதே முடிவு எடுக்காவிடில், கீழ்க்கண்ட தடைகளும் பின்னாளில் வரலாம்.

1. அரிசி நிறைய சேர்ப்பதே சர்க்கரை நோய்க்குக் காரணம் என்று கூறி, இட்லி, தோசை, சாதம் இவற்றிற்குத் தடை- சப்பாத்தி சாப்பிட மட்டுமே அனுமதி

2. வடை, போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்களில் கொழுப்பு அதிகம் இருப்பதால் தடை- சமோசா, பானி பூரி, பேல் பூரி, பிட்சா, பர்கர்க்கு மட்டுமே அனுமதி

3. வேஷ்டியில் பக்கெட் இல்லை- அதனால் வேஷ்டிக்குத் தடை- பேன்ட் போட மட்டுமே அனுமதி. வேண்டுமென்றால் ஷெர்வானி அணிந்து கொள்ளலாம்.

4. கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற கிராமிய கலைகளில் ஆபாசம் நிறைய இருப்பதால் அவைகளுக்குத் தடை- இனிமேல் தாண்டியா மட்டும் ஆட அனுமதி

5. கோயில் திருவிழாக்களில் மஞ்சள் நீரூற்றும் நிகழ்ச்சிக்குத் தடை - ஹோலி கொண்டாட மட்டுமே அனுமதி

6. நாட்டுக்கோழி, காடை, வெள்ளாடு- இவைகளின் இறைச்சி உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதால் தடை. அரசு அங்கீகாரம் பெற்ற KFC, McDonald சிக்கனுக்கு மட்டும் அனுமதி

7. ரஸ்தாளி, இலக்கி, கற்பூரவல்லி போன்ற நாட்டு வாழைப் பழங்களுக்குத் தடை- மோரிஸ் போன்ற மரபணு மாற்றப்பட்ட பழங்களுக்கு மட்டுமே அனுமதி.

2000 - 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியையே தடை செய்ய முடிந்த நம் நாட்டில், மேற்சொன்ன சின்ன விஷயங்களா கடினம்? என்றாவது ஒருநாள், சொந்த மரபு நெறிமுறைகளைத் தொலைத்துவிட்டு, குடிநீர் முதல், மலம் கழுவும் நீர் வரைக்கும் பன்னாட்டு நிருவனங்களிடம் கைகட்டி நிற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.



ஜல்லிக்கட்டு - இனத்தின் அடையாளத்தை அழித்தல்

ஜல்லிக்கட்டு - இனத்தின் அடையாளத்தை அழித்தல்

ஒரு இனத்தை முற்றிலும் வேரறுக்க இரு வழிகள் உண்டு. 1. இன மக்களை முற்றிலும் அழிப்பது, 2. அந்த இனத்தின் அடையாளத்தை அழிப்பது. ஹிட்லர், யூத இன மக்களை அழிக்க முயன்றது முதல் வழி. ஆஸ்திரேலியாவில் பழங்குடியினர்களின் பெண்களை வெள்ளையர்கள் திருமணம் செய்து, கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களின் இனத்தை அழிக்கச் செய்தது இரண்டாம் வழி. அதேபோல், காளைகளைத் துன்புறுத்துகிறார்கள் என்ற பொட்டைக் காரணத்தைக் காட்டி, ஜல்லிக்கட்டு என்ற தமிழனின் பூர்வ அடையாளத்தை அழிப்பதற்கு முயற்சிகள் ஏகபோகமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதைத்தடுத்து நிறுத்த வேண்டிய மத்திய, மாநில அரசுகளோ, இந்த பிரச்சினையை தங்கள் ஓட்டு வங்கிக்கு சாதகமாக மாற்றும் முயற்சியில்தான் முனைப்புடன் இருக்கின்றன என்பது அதனினும் வெட்கக்கேடு.

ஜல்லிக்கட்டை தடை செய்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் இந்த மிருக நல ஆர்வலர்களின் முக்கிய நோக்கம் நம் காளைகளின் மீதுள்ள அன்பா? பரிவா? ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இந்த வழக்கின் சில நாள் செலவே 2 கோடி ரூபாய் என்றால், இதில் பின்னால் யார் இருக்கிறார்கள், அவர்களின் நோக்கம் என்ன என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. அப்படி உண்மையிலேயே விலங்குகள் மீது அக்கறை இருந்தால், இந்தியாவில் மட்டும் அழியும் நிலையில் எண்ணற்ற விலங்குகள் இருக்கின்றன. முதலில் அவைகளைக் காப்பாற்றுங்கள். அப்புறம் ஜல்லிக்கட்டுக்கு வரலாம்.

எங்கள் ஊரில், ஒரு விவசாயியின் காளை இறந்து விட்டது. அவரும், அவர் மனைவியும்,தன் சொந்த மகன் இறந்தது போல, அழுது புரண்டு, இறுதி ஊர்வலம் நடத்தி அந்த காளையை அடக்கம் செய்தனர். இதுவே, எங்கள் மக்களுக்கும், காளைகளுக்கும் உள்ள பந்தம். AC அறையில் உட்கார்ந்து கணிணியைத் தட்டிக் கொண்டு, தின்ற பீட்சா, பர்கர் செரிக்காமல் கோலா-பெப்சி அருந்தும் நீங்கள், காளைகளை எப்படிக் கையாள வேண்டுமென்று எம் மக்களுக்கு சொல்லவேண்டியதில்லை.