Wednesday, December 12, 2012

பீட்சா

  நாம் எல்லோருமே குறைந்தது ஒரு பேய் கதை அல்லது பேய் சம்பந்தமான தகவல்களைக் கேட்டிருப்போம். இன்னும் சிலருக்கு நேரடியான அல்லது மறைமுக அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். சமீபத்தில் வெளியான 'பிட்சா' படமும் பேய் பற்றியதுதான். ஆனால் வெள்ளை புடவை கட்டிக்கொண்டு ஒரு சோக பாடல், கோர-முகம் கொண்ட பேய், பேய்க்கு ஒரு பிளாஷ்-பேக், கிளைமாக்ஸில் ஹீரோ-ஹீரோயின் மட்டும் தப்பிப்பது போன்று தமிழ் சினிமா கிரைண்டரில் பல முறை அரைக்கப்பட்ட சாதாரண பேய் படம் அல்ல இந்த பீட்சா. ஒரு விசேஷமான பேய் படம். எப்படி? வாங்க பாக்கலாம்.

     மைக்கேல் (விஜய் சேதுபதி) ஒரு பீட்சா கடையில் டெலிவரி பாயாக வேலை செய்கிறார். அனு (ரம்யா நம்பீசன்) இவருடைய கர்ப்பமாய் இருக்கும் லிவிங்- டுகெதர் காதலி. ரம்யா நம்பீசன் ஒரு பேய் கதை எழுத்தாளர் (நல்ல கிளப்புங்கடா பீதிய). ஒரு நாள் பீட்சா டெலிவரி செய்ய இரவு நேரத்தில் அண்ணா நகர் போகிறார். பிட்சா ஆர்டர் செய்தவர் ஸ்மிதா (SS music பூஜா). சில்லறை இல்லை என்று அதை எடுக்க வீட்டின் மாடிக்கு போகிறார் ஸ்மிதா. போய் வெகு நேரமாகியும் ஸ்மிதா வரவில்லை என, மைக்கேல் மேலே போகிறார். அங்கே ஸ்மிதா கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். பவர் வேறு பொய் விடுகிறது. ஒரே ஒரு டார்ச் மட்டும் மைக்கேலிடம் இருக்கிறது. அப்போது ஸ்மிதாவின் கணவர் என்று ஒருவர் வீட்டிற்கு வருகிறார். அவர் மைக்கேலை, "இங்கே நீ என்னடா செய்ற" என்று மிரட்ட, மைக்கேல் நடந்த உண்மையை சொல்கிறார். சரி, வெளிய வாடா என அவர் சொல்ல, கதவு லாக் செய்யபட்டு இருப்பது மைக்கேலுக்கு தெரிகிறது. சாவி எடுக்க மேலே போகும்போது வந்தவரும் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். மைக்கேலுக்கு பயம் பயங்கரமாக தொற்றிகொள்கிறது. பின் அங்கே ஒரு பெண் குழந்தையை பார்கிறார். அந்த குழந்தையும் காணமல் போகிறது. சிறிது நேரம் களைத்து அந்த வீட்டிற்கு இரு போலீஸ்காரர்கள் வருகிறார்கள். அவர்களிடம் மைக்கேல், வீட்டில் மூன்று பேய் இருப்பதாகவும், நாம் உடனே இந்த வீட்டை விட்டு ஓடலாம் என்று சொல்லுகிறார். ஆனால் போலீஸ், "நீதான மைக்கேல். அனு என்ற பொண்ண கொன்னுட்டு எஸ்கேப் ஆகிட்ட. உன்ன தாண்டா இவ்ளோ நாளா தேடிட்டு இருந்தோம். நீ இங்க என்னடா பண்ற?" என்று ஒரு பெரிய குண்டை போடுகிறார்கள். மைக்கேலுக்கு ஒன்றுமே புரியவில்லை. சரி முதலில் வீட்டை விட்டு ஓடலாம் என்று முடிவு செய்து ஓட, போலீஸ் விடவில்லை. அவர்களை உதறி விடு மைக்கேல் ஓட, இரு போலீசையும் யாரோ ஒருவர் வீட்டிற்கு உள்ளே இழுத்துக் கொள்கிறார்கள். கதவு மறுபடியும் மூடி கொள்கிறது. மைக்கேல் பிட்சா கடைக்கு வந்து நடந்த உண்மைகளை சொல்கிறார். அனைவரும் சேர்ந்து அனுவை தேடுகிறார்கள். அனுவுக்கு என்ன ஆனது? அந்த வீட்டில் இருப்பது உண்மையிலேயே பேயா இல்லையா? அந்த போலீஸ்காரர்கள் என்ன ஆனார்கள்? கடைசியில் மைக்கேல் என்ன ஆனார்? என்பதை தியேட்டர் சென்று பாருங்கள்.

    இந்த ஒரு மாதிரி ஒரு தமிழ் படம் பார்த்து ரொம்ப நாள் ஆயிற்று. என் சிறு வயதில் "ஜென்ம நட்சத்திரம்" என்று ஒரு திகில் படம் பார்த்து பயந்தேன். அது "ஓமன்" என்ற ஆங்கில படத்தில் அப்பட்டமான காப்பி எனினும், அந்த சிறு வயதில் அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். அதற்கு பிறகு நிஜத்தில் பயந்த படம் என்றால் அது இந்த 'பீட்சா' தான். வழக்கமான தமிழ் படத்தில் இருக்கும் குப்பை மசாலா சங்கதிகள் இந்த படத்தில் ரொம்ப கம்மி (ஒரே ஒரு பாடலைத் தவிற). இன்னும் சொல்ல போனால் இண்டர்வல்க்கு முன்னால், என் மனைவி ரொம்பவே பயந்து போனாள். என் கையை இறுகப் பற்றி கொண்டாள் (நான்  ஏற்கனவே பயந்து போய் இருந்தேன் என்பது வேறு விஷயம்).

   விஜய் சேதுபதி, ஒரு அப்பாவி போல முகத்தை வைத்து கொண்டு பேய் வீட்டில் பயப்படும் போதும், இரண்டாம் பாதியில் பேய்-அறைந்தவன் போல் அலையும் போதும் நல்ல நடிப்பு. ரம்யா நம்பீசனுக்கு அவ்வளவாக நடிக்க ஸ்கோப் இல்லையெனினும், இரண்டாம் பாதியில் திரைக்கதை இவரை வைத்தே சுற்றுகிறது. உச்சமாக, கிளைமாக்ஸில் இவர் என்ன ஆகிறார் என்று பார்த்தால், இந்த பூனையும் பால் குடிக்குமா என்றே நினைக்க தோன்றும்.

  படத்தில் குறைகள் என்று பார்த்தால், படத்தின் ஆரம்ப அரை மணி நேர காட்சிகள். படத்தின் திரைக்கதையின் ஆதாரத்தையே அசைக்கும் இரண்டு காட்சிகள் படத்தில் உள்ளன. ஆனால் அதற்கான் விளக்கம் கிளைமாக்ஸ்க்கு முன்னாடி சொல்லப்படும். உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே ஏன் என்று விளங்கும். இந்த மாதிரி சிறு குறைகள் தெரியா வண்ணம் ஜெட் வேகத்தில் பயணிக்கிறது திரைக்கதை.

  50 கோடிக்கு மேல் பட்ஜெட், பெரிய நடிகர்கள், பிரமாண்ட காட்சியமைப்புகள் இருந்தும் திரைக்கதையில் சொதப்பினால் படம் பப்படம் என்பதற்கு தாண்டவம், மாற்றான், முகமூடி போன்ற படங்களே சாட்சி. குறைவான பபட்ஜெட், அறிமுக நடிகர்கள் இருந்தாலும் வலுவான் திரைக்கதை இருந்தால் படம் நிச்சயம் ஜெயிக்கும் என்பதற்கு 'பீட்சா' ஒரு உதாரணம் (சுந்தர பாண்டியன், அட்டகத்தி பிற லோ-பட்ஜெட் ஹிட் படங்கள்). உண்மையில், முகமூடி படத்திற்கு வலுக்கட்டயமாக என் மனைவியை அழைத்து சென்று செம திட்டு வாங்கினேன். அதற்கு பரிகாரமாய் 'பீட்சா' அழைத்துச் சென்று என் பாவத்தை போக்கி கொண்டேன். பீட்சா பார்த்து விட்டும் என் மனைவி திட்டினாள்; படம் மொக்கை என்று அல்ல, ரொம்ப பயமா இருக்குடா என்று!!!

  ரம்யா நம்பீசன் படத்தில் சொல்லும் ஒரு வசனம்: "பேயை நம்புறதுக்கு எல்லாருக்கும் ஒரு மொமென்ட் வரும். Your moment is waiting". நானும் அதைத்தான் சொல்லுகிறேன். பீட்சா படம் பார்த்து என்ஜாய் பண்ண "Your moment is waiting"!!!