Saturday, November 29, 2014

உஸ்தாத் ஹோட்டல் (Ustad Hotel) விமர்சனம்.

உஸ்தாத் ஹோட்டல் (Ustad Hotel) விமர்சனம்.

நேற்று இரவு நீண்ட நாட்களாகப் பார்க்க விரும்பிய 'உஸ்தாத் ஹோட்டல்' மலையாளப் படத்தைப் பார்த்தேன். கேரளாவின் புகழ்மிக்க நடிகர் திலகனின் கடைசி படம். தந்தையின் விருப்பத்தை மீறி சுவிட்சர்லாந்தில் சமையல் கலை படிக்கும் துல்கர் சல்மான், தன் தாத்தா திலகனின் நஷ்டத்தில் இயங்கும் ஒரு பழமையான ஹோட்டலை எப்படி மீட்கிறார் என்பதே படத்தின் ஒன்-லைன். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட கதை. ஆனால் துல்கர், திலகனின் நடிப்பு, தேர்ந்த திரைக்கதை, உறுத்தாத மெல்லிய இசை- இவையெல்லாம் சேர்ந்து ஒரு அருமையான பீல்-குட் படம் பார்த்த திருப்தியைத் தருகின்றன.

சினிமாவை நேசிக்கும் பலரும் சொல்வது யாதெனில் ஒரு திரைப்படத்தின் ஆன்மா நல்ல திரைக்கதை. அது சரியில்லையெனில், மற்ற சமாச்சாரங்கள் எதுவும் எடுபடாது. இந்த படத்தில் அது சரியான முறையில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று நினைக்கிறன். வேண்டா வெறுப்பாக ஹோட்டல் வேலைகளைச் செய்யும் துல்கர், படிப்படியாக தன் தாத்தா ஏன் நஷ்டத்திலும் அந்த ஹோட்டலை நடத்துகிறார் என்று தெரிந்து, அதை ஏற்று நடத்த முன் வருவதை திரைக்கதை அழகாகப் படம் பிடிக்கிறது. இப்படத்தின், மற்றுமொரு பலம் காஸ்டிங். முக்கியமாக துல்கர் சல்மான். காதல், நகைச்சுவை, விரக்தி, கோபம், அழுகை என அனைத்து உணர்சிகளையும் அவரின் கண்களே எளிதாகப் பிரதிபலிக்கின்றன. நடிப்பதற்கு சில காட்சிகளே இருப்பினும், நித்யா மேனன் 'அழகாக' நடித்துள்ளார். நித்யா+துல்கர் காதல் காட்சிகள் எல்லாம் அட்டகாசம். உச்சமாக, திலகன் தன் உடல் மொழியின் மூலமே அனாயசமாக நடித்துப் பின்னியிருக்கிறார்.

சமீப காலமாக கேரளாவில் நாயக பிம்பம் தவிர்க்கப்பட்டு இந்த மாதிரியான தரமான படங்கள் வர ஆரம்பித்து விட்டன. ஆனால் இங்கே? ஒரு சில நல்ல முயற்சிகள் வந்தாலும், சில முட்டாள் நடிகர்கள் தங்கள் நாயக பிம்பத்தைத் தூக்கி நிறுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் (Ex: அஞ்சான், மான் கராத்தே, etc). ஆனால் அவையெல்லாம் படு தோல்வியடைந்து, அவர்கள் முகத்திலேயே கரியைப் பூசி விட்டன. இனி நல்ல திரை மொழி இல்லாமல், வெறும் மாஸ் ஹீரோ, மசாலா, அஞ்சு பாட்டு- நாலு பைட்-மூணு காமெடி என்றெல்லாம் காலத்தை ஓட்ட முடியாது. அந்த வகையில், மலையாளத் திரையுலகம் நம்மை முந்திக் கொண்டது என்றே எண்ணுகிறேன். அதற்க்கு இன்னுமொரு சான்று இந்த 'உஸ்தாத் ஹோட்டல்'.

இந்த படத்தை உலக சினிமா, மாற்று சினிமா என்றெல்லாம் ஜல்லியடிக்க விரும்பவில்லை. ஆனால் இரண்டு மணி நேரம் உருப்படியாக செலவு செய்து பார்க்கக் கூடிய ஒரு தரமான பொழுது போக்குத் திரைப்படம். அவசியம் பாருங்கள்.

பி.கு. 2012-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், சிறந்த திரைக்கதைக்கான விருது உட்பட மூன்று தேசிய விருதுகள் மற்றும் பல்வேறு விழாக்களில் விருதுகளைக் குவித்தது.

Tuesday, April 22, 2014

சலூன் கடை- அன்றும், இன்றும்  
===============================

அன்று- 2007, IRTT, ஈரோடு

அப்போது எங்களுக்கு 3வது செமஸ்டர். முடி வெட்டப் போனால் மொத்தமாக நான்கு, ஐந்து பேராய்தான் போவோம். பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை காலை சாப்பிட்டு இல்லை சாப்பிடாமல் போவோம். அன்று நான், நண்பர்கள் அய்யர் (அருண்), ரவிந்தர், வெங்கி, விஜயவேல் என ஐந்து பேர் முடி வெட்டக் கிளம்பினோம். நான் 3வதாக முடி வெட்ட உட்கார்ந்தேன்.
மூன்று
நான் "இன்னும் கொஞ்சம் சைடுல கட் பண்ணுங்க".

"தம்பி,இதுக்கு மேல ஷார்ட்டா வெட்டுனா ஒரு மாதிரி இருக்கும்பா"

"எந்த மாதிரியாவும் இருக்காது. அதுக்குத் தக்க சென்டர்ல கட் பண்ணிடுங்க"

"இப்போ ஓகே வா தம்பி?"

"இன்னும் கொஞ்சம் சைடுல"

"டேய் படுத்தாதடா. இப்பவே மணி 12. லஞ்ச்க்குள்ள நம்ம ஹாஸ்டல்க்கு போகணும்" என்றான் வெங்கி.

"சரிடா, கத்தாத"..

நான் சுமாராக ஐந்து முறை இன்னும் கொஞ்சம் சைடுல வெட்டுங்க என்று சொல்லி இருப்பேன்.

இன்று- 2014, மடிப்பாக்கம், சென்னை

இன்றிரவு முடி வெட்டலாம் என்று வீட்டிற்கு பக்கத்தில் இருந்த AC சலூன்க்கு சென்றேன். பின் தலையில் ரொம்ப நேரமும், சைடில் கொஞ்ச நேரம், நடுவில் சுத்தமாக வெட்டாமல், 'டன் சார்' என்றான்.

"என்னய்யா விளையாட்ரியா? சென்டர்ல வெட்டவே இல்ல? நல்லா வெட்டுய்யா"

"சார் சென்டர்ல" என இழுத்தான்.

"சென்டர்ல என்னய்யா?"

"சென்டர்ல வெட்டினா"

"சென்டர்ல வெட்டின என்ன? உன் சிஸர் உடஞ்சிடுமா?"

"இல்ல சார். சென்டர்ல இன்னும் வெட்டினா வழுக்கை நல்லா தெரியும்"

எனக்கு சுரீரென்று உரைத்தது. அவனை சொல்லிக் குற்றம் இல்லை. லேசான காற்றுக்கே என் நடு மண்டை முடி தனியாய் தூக்கிக்கொண்டு, பப்பரப்பே என்று வழுக்கை பல்லை இளிக்கும். அந்தக் கோலத்தில் ஒரு சில ஆபீஸ் நண்பர்களே என்னைப் பார்த்து, "இவருக்கு நடு மண்டையில் முடி இருந்தால் ஹார்ட்வேர் அருண் மாதிரி இருப்பார்ல?" என்று வெகுளியாக சொல்வார்கள்.

"சரி. அப்படியே வெட்டுங்க". ஒரு வழியாக 'கட்'டிங்கை முடித்து விட்டு வீடு செல்கையில், காலேஜில் முடி வெட்டியவரை நினைத்து சிரித்துக்கொண்டேன்.

தெனாலிராமன்

தெனாலிராமன்
===============

குழந்தைகளுக்காகப் படம் எடுப்பது ஒரு வகை என்றால், குழந்தைத் தனமாகப் படம் எடுப்பது மற்றொரு வகை. இதில் தெனாலிராமன் 90% இரண்டாவது வகையான படம். சிறு வயதில் நாம் படித்த தெனாலிராமன் நீதிக்கதைகளையே நீட்டி முழக்கி திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குநர். இந்த கதைகளின் இடையே, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்ற மாபெரும் பிரச்சினையைச் சாமர்த்தியமாகப் புகுத்தி இருக்கிறார். அதற்கு இயக்குநருக்குப் பாராட்டுக்கள். ஆனால், படம் முழுவதையும் ரசிப்பதற்கு இந்த ஒரு அம்சம் போதாதே டைரக்டர் சார்?

3 வருட 'அம்மா' வனவாசத்திற்குப் பிறகு வடிவேலுவைத் திரையில் பார்ப்பதற்குச் சந்தோஷமாக இருந்தது. வடிவேலுவின் பெரும் பலமே அவரின் காமெடி ததும்பும் உடல் மொழிதான் (mannerism). வின்னர், தலைநகரம், இங்கிலிஷ்காரன்- இந்த படங்களில் எல்லாம் வடிவேலுவின் வசனத்தை விட அவரின் உடல் மொழியே அவருக்குப் பெயரை வாங்கித் தந்தது. ஆனால் இந்த படத்தில் பக்கம், பக்கமாய் வசனமாகப் பேசியே மாள்கிறார் வடிவேலு. நமக்கு தான் சிரிப்பு வரவில்லை. சரி திரைக்கதை? தெனாலிராமன் கதைகளை விடுத்துப் பார்த்தால், வடிவேலுவை வைத்து இதைவிட சீரியஸாக எடுக்க முடியாது என்பதால் இறுதி வரை எது சீரியஸ், எது காமெடி என்று குழம்புகிறது. முன்னமே சொன்னது போல் திரைக்கதை மொத்தமுமே அமெச்சூர் தனமாக இருக்கிறது. தேறுவது தேர்ந்த கலை இயக்கம், துல்லிய ஒளிப்பதிவு மற்றும் இமானின் பின்னணி இசை.

வடிவேலுவே பெரும்பான்மைத் திரைக்கதையை எடுத்துக் கொள்வதால் மற்ற எவரும் நடிப்பில் சோபிக்க வாய்ப்பில்லை. பிரியதர்ஷினிக்கு மட்டும் சற்று நல்ல பாத்திரம். ஹும், ஒருவரைப் பற்றி சொல்ல வேண்டும், அவர்-ஹீரோயின். படம் முழுக்க தொப்புள் தெரிய வலம் வருவதாலோ என்னமோ, நடிப்பு, முக பாவம், லிப் சின்க் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படவே இல்லை. சரி, அது தான் படம் முழுக்க வடிவேல் இருக்கிறாரே?

மொத்தத்தில் படம்? நீங்கள் சுட்டி டிவியில் வரும் டோரா- தி எக்ஸ்ப்லோரர் பார்த்து இருக்கிறீர்களா? நம்மால் 5 நிமிடம் கூடப் பார்க்க முடியாது. ஆனால் குழந்தைகள் பயங்கரமாக ரசிப்பார்கள். அதே போல்தான் இந்த படமும். இதை குழந்தைகள் வெகுவாக ரசிக்கக் கூடும். ஆனால் நல்ல சினிமாவை எதிர்பார்த்து சென்றால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். எனவே இது, குழந்தைகளுக்காக, குழந்தைகள் மட்டுமே பார்க்கக் கூடிய படம்.

பின் குறிப்பு: மான் கராத்தேவிற்கு 'தெனாலிராமன்' பல மடங்கு தேவலாம்.


Friday, April 4, 2014

மான் கராத்தே

நம் தமிழ் ஹீரோக்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. இரண்டு படங்கள் ஹிட்டடித்தால் போதும். உடனே அடுத்த படத்தில் மாஸ் காட்ட நினைப்பார்கள். ஓப்பனிங் சாங், பஞ்ச் வசனம், குத்துப் பாடல், செண்டிமெண்ட் இவையெல்லாம் கண்டிப்பாய் வேண்டும் என கீழ்த்தரமான செயல்களில் இறங்குவார்கள். இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்ட் வரவு சிவகார்த்திகேயன். ok, படம் எப்படி? லெட்ஸ் சீ!

ஒரு சில அறிமுக இயக்குனர்கள், அருமையான திரைக்கதையுடன் சில நல்ல முயற்சிகள் எடுத்து நம் சினிமாவை அடுத்த நிலைக்கு சில படிகள் மேலே கொண்டு சென்றால், சில பேர் இந்த மாதிரி குப்பை மசாலாக்களை எடுத்து பத்து படிகள் கீழிறக்கி விடுகின்றனர். அதிலும் 'மான் கராத்தே' பார்க்க முடியாத மொக்கையான குப்பை. நான் சமீபத்தில் பார்த்த 'புலிவால்' படத்தை விட மோசமான, படு அபத்தத் திரைக்கதையை இந்த படத்தில்தான் பார்த்தேன். இதில் கிக் பாக்ஸிங் பற்றி ஏதோ சொல்கிறேன் பேர்வழி என்று அந்த விளையாட்டை எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக் கேவலப்படுத்தி நாறடித்து விட்டனர். கிக் பாக்ஸிங் அமைப்புகள் இந்த படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தால் ஆச்சர்யம் இல்லை.

இந்த படத்தின் லட்சனத்திற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். சிவகார்த்திகேயன் கலந்துகொள்ளும் பாக்ஸிங் இறுதிப் போட்டியின் முடிவு பற்றியே தினதந்தியில் மூன்று பத்தி செய்திதான் வருகிறது. ஆனால் போட்டியின் லீக், அரை இறுதி மேட்ச்சுகள் பற்றி போட்டோவுடன், தலைப்புச் செய்தியே வருகிறதாம். இந்தியா டுடே, தி வீக் புத்தகங்களும் இதில் அடக்கம். நம்மையெல்லாம் அடிமுட்டாள்களை விட கேவலமாக நினைத்து விட்டார் இயக்குனர்.

படத்தில் வரும் காட்சி ஒன்று: இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் தான் ஹன்சிகா எனக்குக் கிடைப்பார் என்று சொல்லி கிருஷ்ண வம்சியிடம் சென்று போட்டியில் இருந்து விலகிக் கொள்ள சிவகார்த்திகேயன் கேட்பார். அப்போது கோபமாக வம்சி, "உங்களுக்கெல்லாம் பாக்ஸிங்னா விளையாட்டாப் போச்சுல்ல" என்பார். இந்த கேள்வியை இயக்குனர் தனக்குக்தானே கேட்டுக்கொள்ளவும். ஏனென்றால், பாக்ஸிஙை அவ்வளவு அசிங்கப் படுத்திவிட்டார்.

இறுதியாக, இந்த படமெல்லாம் ஓடவே கூடாது. ஓடினால், நிறைய பேர் இந்த மாதிரி குப்பைகளை (படம்) எடுத்து நம் தலையில் கொட்டுவார்கள். அப்புறம் நம் சினிமாவின் தரம் மேலும் பல படிகள் சறுக்கி விடும். ஓடிவிட்டால்?? சுஜாதா சொல்வது போல் நம்மை பசித்த புலி தின்னட்டும்.


Monday, March 3, 2014

The Good, The OK, The Ugly

சென்ற வாரம் நான் பார்த்த மூன்று படங்களின் ரத்தினச் சுருக்கமே இந்த metaphor.

1. The Good---> 24 நார்த் காதம் (24 North Miles): பகத் பாசில், நெடுமுடி வேணு, சுவாதி- இவர்களின் அருமையான நடிப்பில் ஒரு பீல்-குட் படம். பாசில் அதீத சுத்தம் பேணும் ஒரு perfectionist. சுவாதி NGO-ல் வேலை செய்யும் ஒரு சமூக சேவகி. நெடுமுடி வேணு வாழ்க்கையின் இறுதியில் இருக்கும் ரிட்டயர்ட் கம்யூனிஸ்ட். இவர்கள் மூவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்குமாறு ஒரு கட்டாயம் ஏற்படுகிறது. அந்த பயணம் தான் படத்தின் திரைக்கதை. படத்தின் ஆதார பலம் அதன் தெளிவான திரைக்கதை மற்றும் காஸ்டிங். அந்நியன் அம்பி மாதிரியான ஒரு ரிசர்வ்ட் perfectionist பாசில், முடிந்த வரை பிறருக்கு உதவும் சுவாதி, மிகவும் பொறுமையோடு வாழ்கையை அணுகும் வேணு என முரணான கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு கோர்வையான திரைக்கதையில் அச்சத்தி விட்டார் இயக்குனர். இது இவரின் முதல் படம் என்பது மேலும் ஆச்சர்யம். தன் மனைவி இறந்தது தெரிந்து சாலையில் இருந்து வீட்டிற்கு நடந்து வரும்போதும், மனைவி உடலைப் பார்த்துவிட்டு தன் வாழ்க்கையில் இனி என்ன இருக்கிறது என்று கண்களாலேயே பேசுவது என வேணு நடிப்பில் பாசிலை விட ஒருபடி மேலே. மேலே சொன்ன காட்சியில் படத்தில் யாருமே அழ மாட்டார்கள். ஆனால் நான் அழுதுவிட்டேன். அதற்க்கு காரணம் வேணுவின் நடிப்பு + உள் மனதை வருடும் பின்னணி இசை. நிச்சயம் பாருங்கள். Rating: 4/5

2. The OK---> தெகிடி (Thegidi): மேம்போக்காக இந்த படம் பிடித்த மாதிரி இருந்தாலும், சற்று ஆழ்ந்து யோசித்தால் ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை மட்டுமே இதில் இருப்பதை உணர முடியும். ஒரு தனியார் புலனாய்வு நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகன், தான் உளவு பார்த்த நபர்கள் ஒவ்வொருவராய் கொல்லப்பட, அதன் மர்மத்தை ஆராய்கிறார். சதியை அடுத்த மூன்று காட்சிகளில் அறிந்து, நான்காவது காட்சியில் மெயின் குற்றவாளியைப் பிடித்து விடுகிறார். தட்ஸ் ஆல். கொலைகளின் காரணம் மட்டுமே புதுசு. மற்றபடி அதன் மரம்த்தை அவிழ்ப்பதை, திரைக்கதையில் இன்னும் சுவாரசியமாக, விரிவாக காட்டியிருக்கலாம். அதை விட்டுவிட்டு ஜனனி அய்யருடன் இரண்டு பாடல், இவர்களின் ரொமான்ஸ் என முதல் பாதி வேஸ்ட் செய்யப்பட்டு விட்டது. இடைவேளைக்கு சற்று முன்னர்தான் படம் ஆரம்பித்த மாதிரி எனக்கு தோன்றியது. எனினும் அபத்த மசாலா, காமெடி இம்சை இல்லாத ஒரு நீட் சஸ்பென்ஸ் த்ரில்லெர் என்ற முறையில் நம்பிப் பார்க்கலாம். Rating :3/5

3. The Ugly---> புலிவால் (Pulivaal): இந்த குப்பைக்கு 'மொண்ணை'வால்  என்ற டைட்டில் மிகப் பொருத்தம் என்று நினைக்கிறேன். ஒரு எலிமெண்டரி ஸ்கூல் ரேஞ்சில் திரைக்கதை இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால், ப்ளே ஸ்கூல் ரேஞ்சில் கூட இல்லை. ஒரு பணக்காரனின் செல்போன், அதுவும் அவனின் அந்தரங்க வீடியோ இருக்கும் செல்போன் கிடைத்தால் எவ்வளவு த்ரில்லிங்காய் திரைக்கதை அமைக்கலாம்? ஆனால் அதை வைத்துக்கொண்டு தனக்குப் பிடிக்காதவர்கள் மேல் சாணியைக் கரைத்து ஊற்ற சொல்கிறார் , கன்னத்தில் அறையச் சொல்கிறார் விமல். எனக்கென்னமோ 40 ரூபாய் கொடுத்து இந்த சாணியை என் தலையில் நானே ஊற்றி விட்டதாகத் தெரிந்தது. எப்போதும் பெருச்சாளியை விழுங்கின மாதிரி முழிக்கும் விமல், SMS கடி ஜோக்காக சொல்லி நம்மை நரகத்தின் வாசலுக்கு இழுத்து செல்லும் சூரி, நானும் காமெடி செய்கிறேன் பேர்வழி என்று அறுக்கும் தம்பி ராமய்யா என்று ஒவ்வொருவரும்  அவரவர் பங்குக்கு நம்மை கொந்தி எடுக்கிறார்கள். டிவியில் போட்டால் கூட பார்க்கக் கூடாத/முடியாத அமர காவியம் இந்த 'மொண்ணை' சாரி புலிவால். Rating- 1/5

Tuesday, February 25, 2014

நான் இறால் வாங்கினேன்

ஞாயிறு அன்று, இறால் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சே, சரி  இன்னைக்கு சமைச்சு சாப்பிடனும்னு நினச்சேன். வீட்டுக்கு பக்கத்திலயே இருக்கும் மீன் கடையல் சென்று, 'அக்கா, இறால் என்ன விலை?' என்று கேட்டேன். அவர், 'இன்னைக்கு ரொம்ப கம்மி தம்பி! கிலோ 400(!?) தான்' என்றார். 'என்னங்க இது? வழக்கமா 300 தான?' என்று ஏதோ தினம் தினம் இறால் வாங்குபவன் போல் நான் அடித்து விட, அதற்க்கு 'தம்பி, 300 ரூவாக்கு நீ தான் போய் கடல்ல பிடிச்சிட்டு வரணும்' என்று பல்பு கொடுத்தார். நமக்கு பல்பு வாங்குவது புதுசு இல்லையென்றாலும், அருகில் இருந்த 2 பெண்கள் சிரிக்கவும், மனசாட்சி கூண்டில் இருந்த மிருகம் முழித்துக்கொண்டு, 'டேய் அருண்! 400 ரூபாய்க்கு கம்மியா இறால் வாங்கியே ஆகணும்டா!' என்று ஆணையிட்டது. உடனே வேளச்சேரி மீன் மார்க்கெட்டுக்கு ஷேர் ஆட்டோவில் புயலென புறப்பட்டேன். அங்கே கூட்டம் கம்மியா இருந்த கடையில் சென்று, இறால் விலை கேட்டேன். 'சார், 300 ருபீஸ் தான் சார்' என்று சொல்ல, என் மைண்ட் வாய்ஸ் 'சபாஷ்டா அருண். பின்னிட்ட' என்று கூச்சலிட, 'எனக்கு அரை கிலோ' என்று இறாலை அள்ளினேன். 'சார், அது 400 ருபீஸ் சார், 300 ருபீஸ் இறால் இங்க இருக்கு சார்' என சற்று குண்டான மண் புழுவைக் காட்டினான். 'எனக்கு இது தான் வேணும்' என பெரிய சைஸ் இறாலைக் காட், 'அப்ப அரைக் கிலோக்கு 200 கொடுங்க' என்றான் கடைக்காரன். 'என்னப்பா நீ' என சொல்ல வந்து, எங்கே இவன் வலையைக் கொடுத்து கடலில் இறக்கி விட்டுவிடுவானோ என பயந்து, என் மூளை என் மைக்கை off  பண்ணியது. நேரம் 12:20 என்றது என் டைமக்ஸ் வாட்ச். சரி ஆகிறது ஆகட்டும் என Rs.200க்கு அரை கிலோ வாங்கினேன். அதோடு என் தேடல் முடியவில்லை. இறால் தோலை உரிக்க 20, ரொம்ப நேரம் ஆனதால் நான் அருந்திய கரும்பு ஜூஸ் 20, இளநீர் 40, திரும்ப வரும்போது ஷேர் ஆட்டோவும் பஸ்ஸும் இல்லாமல் ஆட்டோ சார்ஜ் 50 என என் கணக்கிலே வராமல் 130 ரூபாய் பணால். ஆட்டோவில் போகும்பது, மொத்த செலவு 330 என்றது என் கணிதம். வீட்டிற்கு போகையில் பக்கத்து கடைக்கார அக்கா, 'என்ன தம்பி? இறால் வாங்கினீங்களா?' என்று கேட்க பதில் பேச என்னிடம் வார்த்தையில்லை என்று இத்தோடு எஸ்கேப் ஆகிக் கொள்கிறேன்.

திரா (Thira) மற்றும் மும்பை போலீஸ் (Mumbai Police)

சென்ற வார இறுதியில் இரு அட்டகாசமான படங்கள் பார்த்தேன். அவற்றைப் பற்றி.

1. திரா (Thira): இந்த படத்தைப் பற்றி  ஒரு பதிவரின் தளத்தில் நல்ல விதமாகப் படித்ததால் பார்த்தேன். மிகவும் இறுக்கமான த்ரில்லெர். இளம் பெண்களையும்,  குழந்தைகளையும் கடத்தி விபசாரத்தில் தள்ளும் (Human trafficking) ஒரு மோசமான கும்பலிடம் இருந்து அவர்கள் கடத்திய பெண்களை ஷோபனா மற்றும் தயன் இருவரும் எப்படி மீட்கிறார்கள் என்பதே மையக்கரு. சுஜாதா சொன்னது போல் படம் எடுத்த உடனே கதையை பளிச்சென சொல்லி விட்டு, இறுதிவரை கோர்வையான திரைக்கதையால் பின்னி எடுத்திருக்கிறார் இயக்குனர். இரண்டு சாதாரண நபர்கள், பெரும் பணபலம் + அடியாள் பலம் பொருந்திய கும்பலை ஜஸ்ட் லைக் தட் என சமாளிப்பது சற்று சினிமாத்தனமாக இருந்தாலும் ஷோபனாவின் தேர்ந்த நடிப்பு மற்றும் மின்னல் வேக சீரான திரைக்கதையின் முன் அவை தெரியவில்லை. தெவையற்ற காமெடி, பாடல்கள் மற்றும் ஆபாசம் எதுவும் இல்லாத அழுத்தமான த்ரில்லெர்- திரா.

2. மும்பை போலீஸ் (Mumbai Police): இதுவும் திரா மாதிரி த்ரில்லெர் (Crime thriller) தான். படத்தின் முதல் 5 நிமிடங்களில் இதுதான் படம் என்று சொல்லி விட்டு, நான்-லினியர் முறையில் திரைக்கதை செல்கிறது. இது 'The Usual Suspects' , "Shutter Island' மாதிரியான திரைக்கதை கொண்ட படம். அதாவது கிளைமாக்ஸ்க்கு முன்னால் தான் அது வரை சொல்லப்பட்ட கதை கப்சா என்று தெரியும். திரா போலவே இதிலும் அழுத்தமான, சீரான திரைக்கதை. ஆனால் திராவை விட ஒரு படி மேல். ஏனெனில், இந்த படத்தின் ஹீரோ ஓர் ஓரினச் சேர்க்கையாளர் (Gay). திரைக்கதையின் முக்கிய திருப்பமே அதுதான். ஆனால் இதை கொச்சைப் படுத்தாமல் மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குனர். ஓரினச் சேர்க்கையாளர் பாத்திரத்தில் துணிந்து நடித்த ப்ரித்வி ராஜ் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர். கிளைமாக்ஸில் வரும் ட்விஸ்ட் செம. மொத்தத்தில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.

PS: 'பிரியாணி' படத்தை எல்லாம் மனசாட்சி இல்லாமல் 'த்ரில்லெர்' என்று சொல்லுபவர்கள் மேற்சொன்ன இந்த இரண்டு படங்களையும் பார்த்தால் 'த்ரில்லெர்' படம் என்றால் என்ன என்பது புரியும்.