Tuesday, February 9, 2016

ப்ராஜெக்ட்டும், சோழா மெஸ்ஸும் (1)

ப்ராஜெக்ட்டும், சோழா மெஸ்ஸும் (1)

எட்டாவது செமஸ்டர். ப்ராஜெக்ட் எனப்படும் முக்கியமான வஸ்து வரும் செமஸ்டர். ஆரம்பத்தில் நாமாக எதாவது ப்ராஜெக்ட் செய்து சாதிக்க வேண்டும் என்ற பெரிதாக கனவு இருந்தது. பின்னாளில் ஆசைகள் சுருக்கப்பட்டு, போகப் போக நாமாக செய்வது கடினம் என்பது விளங்கி, நான்காம் ஆண்டில் நாமாக செய்யவே முடியாது என்பது புரிந்தது. கோயம்புத்தூரில் சல்லிசான விலைக்கு ப்ராஜெக்ட் விற்கிறார்கள் என்று தெரிந்து, அவனவன் கோயம்புத்தூருக்கும், ஈரோடுக்கும் அடிக்கடி போய் வர நேர்ந்தது.

 எட்டாவது செமஸ்டரின் ஆரம்பத்திலேயே ப்ராஜெக்ட்க்கு ஆள் சேர்க்கும் படலம் ஆரம்பித்திருந்தது. சில பேர் தேவர் மெஸ்ஸில் பரோட்டா, ஆம்லெட் வாங்கிக் கொடுத்து குரூப் சேர்க்கிறார்கள் என்ற வதந்தி வேறு பரவியது. சரி, நமக்குன்னு ஒருத்தன் இனிமேல பொறக்கப் போகிறான்(?) என்று நினைத்துக் கொண்டு பெரிதாக மெனக்கெடவில்லை. இறுதியாக நான், பரணி, விஜயவேல், மணிவண்ணன் என நான்கு பேராக ப்ராஜெக்ட் குரூப் ஆரம்பிக்கப் பட்டது. க்ரூப்பின் முதல் தீர்மானமாக, நான் ஏற்கனவே கேம்பஸ் இன்டெர்வியுவில் செலக்ட் ஆனதால், ப்ராஜெக்ட்டின் முழு வேலையும் நான் மட்டும் பார்ப்பதாக முடிவு செய்யப்பட்டது. ப்ராஜெக்ட் குரூப் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று நினைத்துக் கொண்டேன்.

ப்ராஜெக்ட் சென்ட்டர் பிடிப்பது அடுத்த வேலை. கோயம்புத்தூரில் ஹோப் காலேஜ் என்னுமிடத்தில் நிறைய ப்ராஜெக்ட் சென்ட்டர்கள் இருப்பது கேள்விப்பட்டு அங்கே போனோம். அங்கே நிறைய இல்லை, திரும்பிய பக்கமெல்லாம், புற்றீசல் போல சென்ட்டர்கள் இருந்தன. எங்கே செல்வது என்று குழம்பி, ஒரு வழியாக ACET என்னும் சென்ட்டரை அணுகி, 10,000 ரூபாய்க்கு பேரம் முடிக்கப்பட்டது. அங்கே சேர்ந்ததற்கு இரண்டு காரணங்கள். 1. அந்த சென்ட்டரில் அமெரிக்க கம்பனியுடன் கொலாப்ரேஷன் இருப்பதாக ஒரு போட்டோவை காட்டினான். அதில் சென்ட்டர் ஓனருடன் ஒரு வெள்ளையன் இருந்தான். 2. அந்த சென்ட்டர் பால்கனியில் இருந்து பார்த்தால் பஸ் ஸ்டாண்டில் நிற்கும் கல்லூரி பெண்கள் தெளிவாகத் தெரிந்தனர்!!!

எங்களுடன் பாலமுருகன் மற்றும் கிருபாகரன்  க்ரூப்பும் அங்கே ப்ரோஜெக்ட்டை வாங்கினார்கள். நாங்கள் எல்லோரும், சென்ட்டர்க்கு பக்கத்திலேயே ஒரு PG ஹாஸ்டலில் ரூம் எடுத்துத் தங்கினோம். இரண்டு நாட்கள் கழித்து ப்ராஜெக்ட் கிளாஸ் தொடங்கும் என்றும், இரண்டு வாரங்கள் நடக்கும் என்றும் ஓனர் சொன்னான். இரு நாட்கள் கழித்து சரித்திர புகழ் பெற்ற வகுப்புகள் தொடங்கின. அப்போது தெரியாது நாங்கள் மொத்தமாக ஏமாற்ற்றப் படப்போகிறோம் என்று..

(தொடரும்)





















Saturday, February 6, 2016

எரியும் பனிக்காடு - அதிகாரச் சுரண்டலின் கொடூர முகம் (Part-2)

எரியும் பனிக்காடு - அதிகாரச் சுரண்டலின் கொடூர முகம் (Part-2)

கருப்பன்-வள்ளி மாதிரியான ஆயிரக்கணக்கான தலித் தொழிலாளர்கள், வெள்ளையர்கள் & சில இந்திய ஈனப் பிறவிகளால் வதைக்கப்பட்டதே எரியும் பனிக்காடு புத்தகம். ஆனால் இன்றுவரை தலித் மட்டுமன்றி, அனைத்து ஏழைத் தொழிலாளர்களும் காலம் காலமாக கொடுமையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு வித்தியாசம், அப்போது வெள்ளையன் + சில துரோகிகள். இப்போது முழுக்க முழுக்க பேராசை பிடித்த (இந்திய) பண முதலைகள்.

ஷாப்பிங் மால்களில் ஒரு கப் காபி நூறு ரூபாய்க்கு விற்கும் இதே நாட்டில்தான், நூறுக்கும் குறைவாக ஒரு நாள் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். வட மாநிலங்களில் இருந்து இங்கே கட்டுமான வேலைக்கு வரும் அப்பாவி தொழிலாளர்களுக்கும், கருப்பன்-வள்ளிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அங்கே, ஆனைமலை எஸ்டேட் என்றால், இங்கே சிங்கார சென்னை. இங்கே அவர்கள் செத்தாலும் கேட்பதற்கு ஒரு நாதியும் கிடையாது.

எல்லாத் தொழிலாளர்களும் சுரண்டப்படுகிறார்கள் என்றாலும், அதிக பாதிப்புக்கு உள்ளாவது- உள்ளாகியிருப்பது தலித் மக்களே. அரசு அதிகாரமும், உயர் ஜாதி வர்க்கமும், அவர்களை ஒரு எல்லைக்கு மேல் வளரவோ, சிந்திக்கவோ விடாமல், தன்னை சார்ந்து இருக்கும் படியாகவே வைத்துக் கொள்ள விரும்புகிறது. இதற்க்கு ஒரு நல்ல உதராணம்- என்னுடன் 10-வது வரை ஒன்றாகப் படித்த தலித் நண்பன், எங்கள் ஊரில் சாணி தட்டிக் கொண்டு இருக்கிறான். அதுவொன்றும் இழி தொழில் இல்லை என்றாலும், மூன்று தலை முறையாக அவன் குடும்பத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதுதான் பிரச்சினை. எங்கே தவறு? யாரைப் பழி சொல்வது? என்ன தீர்வு?

இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது, சில அறிவுஜீவிகள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்தால்தான் இந்தியா உருப்படும் என்று ஜல்லியடிப்பது என்ன மாதிரியான நியாயம் என்று புரியவில்லை. இட ஒதுக்கீட்டை தவறாக உபயோகிப்பதும், அது சரியான நபர்களுக்கு போய் சேரவில்லை என்பதுமே அதில் இருக்கும் தலையாய பிரச்சினைகள். அதை சரி செய்ய வக்கில்லாமல், மனித மலத்தை சுமந்து கொண்டும், கழிவு அடைப்பை சரி செய்ய குழியில் இறங்கி உயிரை மாய்க்கும் பல தலித் மக்களின் ஒரே ஆயுதமான இட ஒதுக்கீட்டையும் அவர்களிடம் இருந்து பிடுங்குவது என்ன நீதி?

என்றைக்கு கழிவு அடைப்பை சரி செய்ய பள்ளத்தில் இறங்குபவன் ஒரு தலித் இல்லையோ, அன்றைக்கு ரத்து செய்து கொள்ளுங்கள் இட ஒதுக்கீட்டை. 









எரியும் பனிக்காடு - அதிகாரச் சுரண்டலின் கொடூர முகம் (Part-1)

எரியும் பனிக்காடு - அதிகாரச் சுரண்டலின் கொடூர முகம் (Part-1)

P.H.டேனியல் எழுதி, இரா.முருகவேள் மொழி பெயர்த்த 'எரியும் பனிக்காடு' (Red Tea) புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். அதன் மீதான பார்வை இங்கே. பாலா இயக்கிய 'பரதேசி' படத்தின் மூலக்கதை இப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரத்திற்கு முன்னால், இந்தியாவில் புரையோடிப் போயிருந்த சாதிய பாகுபாடுகள், ஆங்கிலேயர்களால் கொஞ்சம் மாற்றப்பட்டது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், இந்த புத்தகம் உங்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுக்கும். இந்து மதத்தின் சாதிய அமைப்பால், விவசாய மற்றும் பண்ணைக் கூலிகளாக இருந்த ஏழை தலித் மக்கள், வெள்ளையர்களின் சுய லாபத்திற்காகவும், பண வெறிக்காகவும் எப்படி பலிகாடா ஆனார்கள் என்பதை முகத்தில் அறைந்தால் போல் சொல்கிறது இந்த புத்தகம். நம் நாட்டைச் சேர்ந்த சில ஈனப் பிறவிகளும், தங்கள் நலனுக்காக, வெள்ளையர்களின் கால்களைக் கழுவிப் பிழைத்துக் கொண்டு, தன சொந்த இன மக்களியே பலி கொடுத்த கொடூரத்தையும் பதிவு செய்துள்ளது.

விவசாயம் பொய்த்ததால், சொந்த ஊரில் பிழைக்க வழியற்று, கங்காணியின் ஆசை வார்த்தையில் மயங்கி, தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்குப் போகும் கருப்பன்-வள்ளி தம்பதிகளின் பயணத்தில் ஆரம்பிக்கிறது கதை. அங்கே நடக்கும் சுரண்டல்கள், கொடுமைகள், பாலியல் வன்முறைகள், கற்பனைக்கும் எட்டாத கொடூரங்கள் அவர்களின் மூலமாக சொல்லப் படுகிறது. ஒரு வருட ஒப்பந்தத்தில் வரும் கருப்பன்-வள்ளி தம்பதி, கங்கானியால் ஏமாற்ற்றப்பட்டு, மூன்று வருடம் தங்க நேர்ந்து, வள்ளியின் மரணத்தில் முடிகிறது புத்தகம். வள்ளியின் மரணத்தில், அழுவது கருப்பன் மட்டுமல்ல, நாமும்தான்.

புத்தகம் படித்த மறுநாள், அலுவலகத்தில் தேநீர் அருந்தும்போது, ஒரு கணம் உற்றுப் பார்த்தேன். அது கருப்பன்-வள்ளியின் கண்ணீரும், ரத்தமுமாக தெரிந்தது. முதலாளித்துவத்தின் பணவெறிக்கு பலியான அத்தனை தேயிலைத் தொழிலாளர்களின் கண்ணீரும், ரத்தமும் நாம் அருந்தும் ஒவ்வொரு தேநீர் துளியிலும் இருக்கிறது என்பதே மறுக்க முடியாத, கசப்பான உண்மை...